திருப்பூர், மார்ச் 3: திருப்பூர் மாநகரப்பகுதியில் கடந்த 2 மாதத்தில் 10 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாநகரப்பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் உள்பட 10 போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகிறது. தொழில் நகரமான திருப்பூரில் குற்றச்சம்பங்களும் அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களில் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தும் வருகின்றனர்.
அதன் படி மாநகரப் பகுதியில் ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 10 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். மாநகர போலீசாரின் இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாநகரப் பகுதியில் குற்றங்கள் நடைபெறுவதற்கு ஏற்றவாறு போலீசார் நடவடிக்கை சிறப்பாக உள்ளது. தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யும் நடவடிக்கையால் மற்ற குற்றவாளிகள் மேலும் குற்றச்செயல்களில் ஈடுபட அச்சப்படும் சூழல் உள்ளது. அதுமட்டுமல்லாமல் குற்றங்கள் குறையவும் வாய்ப்பாக உள்ளது, என்றார்.