அதிமுக கொடி கம்பத்தை அகற்றாத நகர செயலாளர் மீது வழக்கு

ஊட்டி, மார்ச் 3: ஊட்டி நகரில் 72 மணி நேரம் அவகாசம் அளித்தும் அ.தி.மு.க. கொடி கம்பத்தை அகற்றாத நகர செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 26ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அன்றைய தினம் முதல் தேர்தல் நன்னடைத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதைத்தொடர்ந்து, அரசியல் கட்சி தலைவர்களின் சிலை மறைக்கப்பட வேண்டும். கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் புகைப்படங்களையும் அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

நகரில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற 72 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களது கம்பங்களை அகற்றிவிட்டனர். ஒரு சில கட்சியினர் கொடிக் கம்பங்களை அகற்றாமல் அவற்றை துணியால் மறைத்தனர். ஆனால், ஊட்டி நகரில் அ.தி.மு.க. கொடிகம்பம் ஒன்று அகற்றப்படாமல் இருந்தது. இதனை உடனடியாக அகற்றும்படி தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், 72 மணி நேரத்திற்கு மேல் அகற்றப்படாத நிலையில் சம்பந்தப்பட்ட அ.தி.மு.க. நகர செயலாளர் சண்முகம் மீது ஊட்டி பி1 காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின், நகராட்சி அதிகாரிகளைக் கொண்டு இந்த கொடி கம்பம் அகற்றப்பட்டுள்ளது.

Related Stories: