நகைக்கடன் தள்ளுபடி குறித்த கடைசி தேதி அறிவிக்காத நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைக்க படையெடுக்கும் மக்கள்

ஊட்டி, மார்ச் 3: நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடைசி தேதி குறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில் தற்போதும் பல கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைக்கும் பணியில் மக்கள் மும்முரம் காட்சி வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. தேர்தல் அறிவிப்புக்கு முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி, மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார். நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், எந்த தேதி வரை நகைகளை அடகு வைத்தவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், தற்போதும் பெரும்பாலான மக்கள் கூட்டுறவு வங்கிகளை மொய்க்கின்றனர். 6 பவுன் உட்பட்ட நகைகளை எடுத்து சென்று வங்கிகளில் அடகு வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வங்கி அதிகாரிகள் அதனை வாங்கி அடகு வைத்து வருகின்றனர். எந்த தேதி வரை வைக்கலாம் என தெரிவிக்காத நிலையில் பொது மக்கள் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக வங்கிகளை முற்றுகையிட்டு நகைகளை அடகு வைத்து வருகின்றனர். இதில், பெரும்பாலான மக்கள் விவசாயத்திற்கு இல்லாமல்  தள்ளுபடி என்ற ஒரே காரணத்திற்காக இந்த நகைகளை அடகு வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: