மது போதையில் ரூ.30,000 மதிப்பிலான நெல் மூட்டைகளை தீயிட்டு கொளுத்திய வாலிபர் கைது

நாகை, மார்ச் 3: திட்டச்சேரியில் மது போதையில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான நெல் மூட்டைகளை தீயிட்டு கொளுத்தியவரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் திட்டச்சேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய மருங்கூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன் எடுத்து சென்றார். ஆனால் அங்கு நெல் மூட்டைகளை வைக்க இடமில்லை. இதையடுத்து இளங்கோவன், அருகில் உள்ள இடத்தில் நெல் முட்டைகளை வைத்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அங்கிருந்த ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 30 நெல் மூட்டைகளை மர்மநபர்கள் தீயிட்டு கொளுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து இளங்கோவன் கொடுத்த புகாரின்பேரில் திட்டச்சேரி இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். இதில் திட்டச்சேரியை சேர்ந்த கார்த்திகேயன் (27) என்பவர் மது போதையில் அங்கிருந்த நெல் மூட்டைகளை தீயிட்டு கொளுத்தியது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகேயனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: