மழையால் நெல் மூட்டைகள் சேதம் நேரடி கொள்முதல் நிலையத்திலிருந்து வீட்டுக்கு எடுத்து சென்ற விவசாயிகள்

கொள்ளிடம், மார்ச் 3: மாதானம் நேரடி கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழை யால் சேதமடைந்ததால் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் மறுபடியும் வீட்டுக்கு ஏமாற்றத்துடன் எடுத்து சென்றனர்.

கொள்ளிடம் அருகே மாதானம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு மாதானம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து கடந்த 2 மாதமாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கொள்முதல் நிலைய வளாகத்தில் விவசாயிகள் கொண்டு வந்து நெல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர். ஆனால் உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய தவறியதாலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையாலும் நெல் மூட்டைகள் சேதமடைந்தது. இதனால் நெல் மூட்டைகளை தங்களது வீடுகளுக்கு விவசாயிகள் எடுத்து சென்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்தாண்டு இறுதியில் பெய்த மழை காரணமாக சம்பா நெற்பயிர் சேதமடைந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீதமிருந்த நெற்பயிரை அறுவடை செய்து அதன்மூலம் கிடைத்த குறைந்த அளவே உள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்துக்கு எடுத்து எடுத்து வந்தோம். ஆனால் இங்கு போதிய பாதுகாப்பின்றி 100க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்து விட்டது. மேலும் விவசாயிகளுக்கு வேளாண்துறை மூலம் 50 சதவீத மானியத்தில் வந்த தார்ப்பாய்களை விவசாயிகள் விலை கொடுத்து வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

75 சதவீத மானியத்தில் தார்பாய்கள் வழங்கியிருந்தால் நெல் மூட்டைகளை விவசாயிகள் அந்தந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையிலிருந்து பாதுகாத்து இருக்கலாம். ஆனால் தார்பாய்கள் இல்லை. மானியம் இருந்தும் விலை அதிகம் உள்ளதால் விவசாயிகளால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய வேண்டிய தார்ப்பாய்களை 75 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டு சேதமான நெல் மூட்டைகளையும் விவசாயிகள் நலன்கருதி உடனடியாக மீண்டும் கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.

Related Stories: