×

விவசாய நிலத்தில் திடீர் தீ விபத்து

 

போச்சம்பள்ளி, மே 19: போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை அருகே, விவசாய நிலத்தில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனால் எழுந்த நச்சுப்புகையால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டாரத்தில் நடப்பாண்டு கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் வறண்டு காய்ந்து வருகிறது. வனப்பகுதி மட்டுமின்றி, விவசாய நிலங்களிலும் மரம், செடி,கொடிகள் காய்ந்து காணப்படுகிறது. பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகள் கோடை மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று திடீரென தீப்பற்றிக் கொண்டது.

சருகுகளில் பற்றிய தீ, செடி, கொடிகளுக்கு பரவியதுடன், கடும் புகையை கக்கியது. இந்த புகை சுமார் ஒரு கி.மீ., தூரத்துக்கு பரவியதால், அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்களுக்கு கண் எரிச்சல், குமட்டல், மூச்சு திணறல் ஏற்பட்டது. விவசாய நிலத்தில் திடீரென தீ பரவியது கண்டு, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ மளமளவென கொளுந்து விட்டு எரியத் துவங்கியது. இதுகுறித்த தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

Tags : Pochampally ,Pochampally Government Hospital ,Krishnagiri district ,
× RELATED காய்கறிகள் விலை 2 மடங்கு உயர்வு