நாகர்கோவில், மே 18: நாகர்கோவில் ராணித்தோட்டம் பணிமனையில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க் விரையில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. வாகனப்பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகர பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வழக்கமாக மாறிவிட்டது. விசேஷ நாட்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் பெட்ரோல் பங்க் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக பெட்ரோல் பங்க் இருந்தாலும், சில நேரங்களில் பெட்ரோல் பங்குகளில் அதிகமான கூட்டம் இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்து கழகம் பெட்ரோல் பங்க் தொடங்க முடிவு செய்து அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
நாகர்கோவில் ராணித்தோட்டம் பணிமனை 1ல் பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாகர்கோவிலில் பல பெட்ரோல் பங்குகள் உள்ளன. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ராணித்தோட்டத்தில் பெட்ரோல் பங்க் அமைக்க முடிவு செய்யப்பட்டு, பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நெல்லை அரசு போக்குவரத்து கழகத்திலும் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுபோன்று குமரி மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வரவுள்ளது. அதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது என்றார்.
