கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர், நகை கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: கோரிக்கை மனு

 

நெல்லை, மே 19: கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன் மற்றும் நகை கடன்களை மாநில அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விவசாயிகள் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் மூவி சுந்தர் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டுவந்த சங்க நிர்வாகிகள் சுரேஷ்குமார், வேலுச்சாமி, மைக்கேல், முத்துப்பாண்டியன் முருகன், சவுந்தர் ராம் உள்ளிட்டோர் கலெக்டர் சுகுமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. விவசாயிகளுக்கு பயிர்கள் சரியான விளைச்சல் இல்லாமையும், கிடைக்கிற விளைச்சலில் சாகுபடி பயிரை விற்க போனால் சரியான விலை இல்லாமையும் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதை நம்பியே விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வீட்டில் உள்ள நகைகளை வைத்து விவசாய கடன் பெற்றுள்ளனர். போதிய விளைச்சலும், போதிய விலையும் இல்லாததால் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வைத்துள்ள நகையை திருப்பி மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ள தமிழக முதல்வர், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள நகைக்கடன் மற்றும் பயிர்கடன் தள்ளுபடி செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு கலெக்டர் இதனை பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

 

Related Stories: