பழநி, மே 19: பழநி பகுதியில் பெய்து வரும் கோடை மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பழநி பகுதியில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாதபடி அனல் காற்று வீசியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பழநி நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் பழநி நகரில் வீசி வந்த அனல் காற்று நீங்கி குளிர் காற்று வீசி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பழநி பகுதியின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமான அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி 65 அடி உயரமுள்ள பாலாறு- பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 35.43 அடியாக உள்ளது. அணையில் இருந்து 16 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதியில் பெய்த மழையின் அளவு 5 மில்லி மீட்டராக பதிவாகி உள்ளது.
