முசிறி, மார்ச் 2: முசிறி சப்கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. முசிறி சப்-கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜோதிசர்மா தலைமை வகித்து தேர்தல் நடைமுறைகள் குறித்து பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றி விரிவாகப் பேசினார். நேர்முக உதவியாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், வழிபாட்டுத்தலங்கள், பள்ளி வளாகங்களில் கட்சி அலுவலகங்கள் அமைக்கக்கூடாது. கட்சி அலுவலகங்கள் அமைப்பதற்கான அனுமதியை இணையதளம் வாயிலாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து பெற வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தங்களது கூட்டம் நடத்தும் இடம், நாள் உள்ளிட்ட விபரங்களை முன்கூட்டியே இணையதளம் மூலம் விண்ணப்பித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.