ஆண்டிபட்டி, மார்ச் 2: ஆண்டிபட்டி கணவாய் மலைப்பகுதியில் தேனி-மதுரை மாவட்ட எல்லைப்பகுதியில் போலீசார் உதவியுடன் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் ஏப்.6ல் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கும் என கடந்த மாதம் 26ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அப்போது முதல் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணி நடைபெற்று வருகிறது. மேலும், தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, போலீசார் துணையுடன் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று தேனி-மதுரை மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதிகளில் அமைக்கப்பட்டு போலீஸ் சோதனை சாவடியில், தேர்தல் பறக்கும் படையினர் முகாமிட்டு அந்த வழியாக வரும் வாகனங்களில் சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பணம் பட்டுவாடா மற்றும் பரிசுபொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்குவதை தடுக்கும் வகையில், தொகுதி முழுவதும் போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் காலை, மாலை, இரவு என 3 கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதில், கண்காணிப்பு குழு அதிகாரி மணிகண்டன் தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் குருசாமி மற்றும் ரமேஷ் கண்ணன், காமாட்சி, கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகளும், போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.