வீரவநல்லூர்,மே 18: சேரன் மகாதேவியில் சாலையில் கண்டெடுத்த 1 பவுன் தங்க நாணய நேர்மையுடன் ஒப்படைத்த கல்லூரி மாணவிக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் மாரிசெல்வம் மகள் இசைசத்யா (19). நாகர்கோவில் அருகேயுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி விவசாயம் படித்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்த இசைசத்யா நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்து பொருட்கள் வாங்க பஜாருக்கு சென்றுள்ளார்.
அப்போது காந்திபார்க் அருகேயுள்ள காவலர் குடியிருப்பு அருகில் இசை சத்யா நடந்து சென்ற போது சாலையோரம் சுமார் ஒரு பவுன் எடையுள்ள திருமாங்கல்யம் கிடப்பதை கண்டெடுத்துள்ளார். இதனையடுத்து நேர்மையுடன் அதனை சேரன்மகாதேவி போலீசில் இசை சத்யா ஒப்படைத்துள்ளார்.
விசாரணையில் திருமாங்கல்யத்தை தவற விட்டவர் காந்தி பார்க் பகுதியைச் சேர்ந்த ராஜன் மனைவி சிவசங்கரி (40) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நேர்மையுடன் ஒரு பவுன் தங்கத்தை ஒப்படைத்த கல்லூரி மாணவி இசைசத்யாவிற்கும் அவரது தந்தையான கட்டிட தொழிலாளி மாரிசெல்வத்திற்கும் சால்வை அணிவித்து இன்ஸ்பெக்டர் தர்மராஜ் கவுரவித்தார்.
