நாகர்கோவில், மே 18: வடசேரியில் பஸ்சில் நான்கே முக்கால் பவுன் செயினை 3 பெண்கள் பறித்து சென்றனர். பூதப்பாண்டி அருகே ஞாலத்தை சேர்ந்தவர் அனிதா. இவர் கிருஷ்ணன்கோயிலில் உள்ள மளிகை கடையில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை தாழக்குடியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டு, கடைக்கு வேலைக்கு வந்தார்.
அப்போது, பஸ்சில் 3 பெண்கள் அனிதாவை சுற்றி நெருக்கி தள்ளியுள்ளனர். பஸ் எஸ்எம்ஆர்வி நிறுத்தத்தில் அனிதா இறங்கியுள்ளார். அப்போது, அவரது கழுத்தில் கிடந்த நான்கே முக்கால் பவுன் எடையுடைய செயின் மாயமாகி இருந்தது. இதனையடுத்து வடசேரி காவல் நிலையத்தில் அனிதா புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
