திருத்துறைப்பூண்டி, மே 18: திருத்துறைப்பூண்டி பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதில் மின் கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் பாதிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று விடியற்காலை முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
தொடர்ச்சியாக பெய்த கனமழையின் காரணமாக திருத்துறைப்பூண்டி சப்-ஸ்டேஷனில் அருகில் சோலார் இரும்பு மின் கம்பம் அருகில் கட்டிமேடு சென்ற மின் பாதையில் மூன்று மின்கம்பங்கள் மீது சாய்ந்து விழுந்ததால் சுமார் இரண்டு மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. மின் கம்பம் சாய்ந்ததை அறிந்த மின்வாரிய பணியாளர்கள் விரைந்து சென்று பணிகளை முடித்து மின் விநியோகம் செய்தனர்.
