வாகன சோதனையின்போது 46 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் தேர்தல் கண்காணிப்புக்குழு நடவடிக்கை

மானாமதுரை, மார்ச் 2: மானாமதுரையில் வாகன சோதனையின்போது சிக்கிய 46 மூட்டை ரேஷன் அரிசியை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலானதில் இருந்து தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மானாமதுரை தாசில்தார் மாணிக்கவாசகம், கண்காணிப்புக்குழு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், நகரில் வைகை மேம்பாலம் அண்ணா சிலை அருகே, நேற்று வாகன சோதனை நடத்தினர்.

அப்போது சரக்கு வாகனம் ஒன்றில் அரிசி மூட்டைகளை மறைத்து வைத்து கொண்டு சென்றனர். தேர்தல் பறக்கும்படை மற்றும் போலீசாரை பார்த்த டிரைவர் சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடினார்.வாகனத்தில் பறக்கும்படையினர் சோதனையிட்டபோது, ‘ரேசன் அரிசி 46 மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து தாசில்தார் மாணிக்கவாசகம், மாவட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட வழங்கல் அலுவலக ஊழியர்கள் சரக்கு வாகனத்தை எடுத்துச் சென்றனர். ரேஷன் அரிசி கடத்தியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: