பட்டிவீரன்பட்டி, மே 18: பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம் மருதாநதி அணை குடியிருப்பு பகுதியில் நேற்று பலத்த காற்று வீசியது.இதன் காரணமாக உலக மரம் ஒன்று, மின்கம்பங்கள் மீது சாய்ந்தது. இதில் 3 மின்கம்பங்கள் இரண்டாக உடைந்து சேதமடைந்தன. இதனால் இப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. இதுகுறித்து பகுதி மக்கள் அய்யம்பாளையம் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் மணிகண்டன், உதவி பொறியாளர் செல்ல காமாட்சி தலைமையிலான மின்வாரிய பணியாளர்கள் விரைந்து வந்து உடைந்த கம்பங்களை மாற்றி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மரம் விழுந்து உடைந்த மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின் கம்பங்கள் நிறுவும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
