பழநி, மே 18: சிறப்பாசிரியர் தேர்வு எப்போது நடத்தப்படுமென தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், தையல் ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இந்த பணிகளுக்கு கடந்த 2017ம் ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது. 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது வரை சிறப்பாசிரியர் பணிகளுக்கு தேர்வு நடத்தப்படவில்லை. அரசு பள்ளிகளில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முன்வர வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி கூறியதாவது: காலி பணியிடங்களை கண்டறிந்து உடனடியாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முன்வர வேண்டும். இதன்மூலம் சிறப்பாசிரியர்களின் வாழ்வு வளம் பெறும். இவ்வாறு கூறினார்.
