பழநியில் தேர்தல் பணிக்கு தனி கட்டுப்பாட்டு மையம்

பழநி, மார்ச் 2: தேர்தல் தேதி நெருங்குவதால் பழநி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 35 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அதுபோல் தேர்தல் ஆணையம் தனது தேர்தல் பணியை ஜரூராக நடத்தி வருகிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பழநி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி இக்கட்டுப்பாட்டு அறைக்கு 3 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேட்பாளர் பிரசார அனுமதி, ஒலிப்பெருக்கி அனுமதி போன்றவற்றிற்கும், தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை ஒரே இடத்தில் தெரிவிக்கும் வகையில் இக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், செலவின மேற்பார்வை குழுவின் செயலாக்கத்திற்கு தகவல் பரிமாற்றம் மூலம் முழு அளவிலான ஒத்துழைப்பிற்கு உதவும் வகையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து நாட்களிலும், 24 மணிநேரம் செயல்படும் வகையில் இக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பெறப்படும் புகார்கள் கணக்கு குழுவிற்கு உடன் தெரிவிக்கப்படும். ஒரு முதுநிலை அலுவலரின் பொறுப்பில் செயல்படும் இக்குழுவிற்கு கிடைக்கும் புகார்கள் உடனுக்குடன் பதிவு செய்து எவ்வித தாமதமின்றி உடனடியாக தொடர்புடைய அலுவலருக்கு தெரிவிக்கப்படும். பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க 04545- 242250 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். இதுபோல் 0451- 2460505 என்ற எண்ணில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் தொடர்பு கொள்ளலாமென கோட்டாட்சியர் அசோகன் தெரிவித்துள்ளார்.

Related Stories: