தேர்தல் கட்டுப்பாட்டால் குறைதீர்வு கூட்டம் ரத்து வீட்டுமனையை மீட்டுத்தரக்கோரி குடும்பத்துடன் கூலித்தொழிலாளி தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திருவண்ணாமலை, மார்ச் 2: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், கூலித்தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா கட்டுப்பாடு காரணமாக வாராந்திர குறைதீர்வு கூட்டம் கடந்த ஆண்டு மார்ச் முதல் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து. 10 மாதங்களுக்கு பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கடந்த மாதத்தில் 4 வாரங்களாக குறைதீர்வு கூட்டம் நடந்தது. இந்நிலையில், தேர்தல் நடத்தைவிதிமுறை அமலுக்கு வந்துவிட்டதால், குறைதீர்வு கூட்டம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, மாற்று ஏற்பாடாக பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. எனவே, குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது தெரியாமல், கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்திருந்த பொதுமக்கள், தங்கள் கோரிக்கை மனுக்களை அங்கிருந்த பெட்டியில் செலுத்திவிட்டு ஏமாற்றத்துடன் சென்றனர்.

இந்நிலையில், சேத்துப்பட்டு அடுத்த நம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்(40) என்பவர், தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுவுடன் வந்தார். அப்போது, திடீரென மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து, அவர்களை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். அதைத்ெதாடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்வதாகவும், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் 4 சென்ட் வீட்டுமனையை சமீபத்தில் வாங்கியதாகவும் தெரிவித்தார். ேமலும், விலைக்கு வாங்கிய இடத்தை அளந்தபோது, 3 சென்ட் இடம் மட்டுமே இருந்ததால், இது ெதாடர்பாக வழக்கு தொடர்ந்திருப்பதாக தெரிவித்தார். அதோடு, சம்பந்தப்பட்ட இடத்தை விற்ற நபரே, தற்போது அந்த இடத்தில் தமிழக அரசின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டிருப்பதால், அந்த இடத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரில் சென்று மனு அளிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். மேலும், தீக்குளிக்க முயன்றதாக சுரேஷ் மீது திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: