சென்னை: டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக விற்பனை செய்வோரை கண்காணிக்க வேண்டும்; அவ்வாறு செய்ய தவறி பணியில் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை ஆணையர் கார்த்திகா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளை முறைப்படுத்தவும் அரசின் ஆலோசனைப்படி பல்வேறு உத்தரவுகள் இக்கடிதம் வாயிலாக அனைவருக்கும் பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி பள்ளி, கல்லூரிகள், விடுதிகள் மற்றும் போக்குவரத்து முனையங்களுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க தொடர் சோதனைகள் நடத்தப்பட வேண்டும்.
போதைப்பொருள் நடமாட்டத்தைக் கண்டறிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள் மற்றும் குடியிருப்பு சங்கங்களை உள்ளடக்கிய ரகசிய தகவல் நெட்வொர்க் உருவாக்கப்பட வேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் மற்றும் போதைப்பொருள் பதுக்கல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் (FL2, FL3) குறிப்பிட்ட நேரத்தின்படி மட்டுமே இயங்குவதை உறுதி செய்ய வேண்டும், டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை (எம்.ஆர்.பி) விட கூடுதல் விலைக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,
21 வயது பூர்த்தியடையாத நபர்களுக்கு டாஸ்மாக் கடைகளிலோ அல்லது பார்களிலோ மதுபானங்கள் வழங்கக்கூடாது, உரிமம் இல்லாத சட்டவிரோத பார்கள் மற்றும் பெட்டிக்கடைகளில் சில்லறையாக மது விற்பனை செய்வது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு மூடப்பட வேண்டும், பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்களும், சுகாதாரத்துறையுடன் இணைந்து போதை மீட்பு முகாம்களும் நடத்தப்பட வேண்டும், இந்த உத்தரவுகளை பின்பற்ற தவறும் மற்றும் பணியில் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
