தஞ்சை, மார்ச் 2: தஞ்சையில் நடந்து வரும் கண்காணிப்புக்குழு வாகன தணிக்கையை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை கும்பகோணம் சாலை கரந்தை கோடியம்மன்கோயில், பட்டுக்கோட்டை புறவழிச்சாலை ஆகிய இடங்களில் உள்ள நிலையான கண்காணிப்புக்குழு வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதன் பணிகளை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தஞ்சை, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், பேராவூரணி, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய 8 சட்டமன்ற தொகுதி தேர்தல் நன்னடத்தை விதிகள் கடைப்பிடிப்பதை கண்காணிக்கும் வகையில் 24 பறக்கும் வடை, 24 நிலையான கண்காணிப்புக்குழு வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வேட்புமனு தாக்கல் நெருங்கி வருவதையொட்டியும், தேர்தல் விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்கும் வகையில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அதிக அளவு கவனமெடுத்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.