கும்பகோணம், மே 16: கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட துக்காம்பாளையம் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ஜெயச்சந்திரன் (46). இவர், நேற்று முன்தினம் மதியம் மது போதையில் கும்பகோணம் மடத்து தெரு பகுதியில் சாலையில் இருந்த கற்களை பொதுமக்கள் மீது வீசியும், காலியான மது பாட்டில்களை கொண்டு அந்த வழியாக சென்ற நான்கு சக்கர வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தும் அலப்பறையில் ஈடுபட்டார்.
மேலும், ரீப்பர்களால் சாலையில் சென்ற வாகனங்களை உடைப்பது போல் அச்சுறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினார். இதனால் அந்த பகுதியில் சென்றவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஜெயச்சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
