பாங்காக்: தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் ஆடவர் இரட்டையர் காலிறுதிப் போட்டயில் நேற்று, இந்திய வீரர் சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி இணை அபார வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தாய்லாந்தின் பாங்காக் நகரில், தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டி ஒன்றில் இந்திய நட்சத்திர வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை, ஜப்பானை சேர்ந்த டகுமி நொமுரா, யுய்சி ஷிமோகமி இணையுடன் மோதியது. போட்டியின் துவக்கம் முதல் இந்திய வீரர்கள் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தினர். முதல் செட்டில் சிறப்பாக ஆடி புள்ளிகளை குவித்த அவர்கள் 21-12 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினர்.
தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் அட்டகாசமாக ஆடிய அவர்கள், 21-13 என்ற புள்ளிக்கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினர். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய இந்திய இணை அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். இன்று நடக்கும் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் சாத்விக், சிராக் ஷெட்டி இணை, மலேசிய வீரர்களான நூர் இஸுதின் பின் ரம்சானி, கோ ஸி ஃபெ இணையுடன் மோதவுள்ளனர்.
