கடலூர், மார்ச் 2: கடலூர் குப்பங்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(30). இவர் கடந்த 16ம் தேதி இரவு தனது நண்பர்கள் 9 பேருடன் கடலூர் சுப்பராயலு நகர் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த ரவுடி வீரா என்கின்ற வீராங்கன் என்பவர் தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு தப்பிவிட்டார். இதையடுத்து பண்ருட்டி புதுப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார் கிருஷ்ணன் உட்பட 5 பேரை பிடித்தனர். பின்னர் கிருஷ்ணனை மட்டும் மறுநாள் அதிகாலை மற்ற கொலையாளி இருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதற்கு அழைத்துச் சென்றனர். அப்போது கிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர் தீபனை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்றார். அப்போது என்கவுண்டர் செய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து கிருஷ்ணன் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு பின்னர் பண்ருட்டி நீதிபதி மணிவர்மன் முன்னிலையில் 18ம் தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.