தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
புதுக்கோட்டை, மார்ச் 2: புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார் வர பெற்றுள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதி சீட்டு பெற்று இயக்கப்படும் பேருந்துகளில் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 1989 விதி எண் 176 (2)ல் கண்டுள்ள விவரங்கள் அனைத்தையும் கொண்டுள்ள பயண சீட்டுகளை மட்டுமே பயணிகளுக்கு வழங்க வேண்டும்.
பயணச்சீட்டு கருவி மூலம் வழங்கப்பட்டாலும் அல்லது கையால் எழுதி வழங்கப்பட்டாலும் பயணச்சீட்டில் முழு விவரங்களும் பதியப்பட்டிருக்க வேண்டும். மேலும் அரசானையின்படி அனுமதிக்கப்பட்டுள்ள கட்டணத்தை மட்டுமே பயணிகளிடம் கட்டணமாக வசூலிக்க வேண்டும். மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலரின் 9384808384 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.