மயிலாடுதுறை, மே 15: மயிலாடுதுறையில், மயிலை இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் கதிர்வேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து டூவீலரில் பேரணியாக சென்று சின்னக்கடைத்தெரு வழியாக மயிலாடுதுறை பூம்புகார் ரோட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அடைந்தனர்.
ஹெல்மெட் வெறும் அபராதத்தை தவிர்ப்பதற்கான கருவி அல்ல, அது விபத்தில் உயிர் காக்கும் \”உயிர்க்கவசம்\”: தலையில் ஏற்படும் காயம், மூளை பாதிப்பு மற்றும் இறப்பை தடுப்பதால், டூவீலரில் செல்வோர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். தரமான ஹெல்மெட்களைப் பயன்படுத்த வேண்டும். வாகன ஓட்டிகள் அவசியம் லைசென்ஸ் பெற்று வாகனங்களை இயக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் ராம்குமார், சங்க மாவட்ட தலைவர் சுரேஷ், துணை தலைவர் பக்கிரி, செயற்குழு தலைவர் ஆனந்த், செயலர் அன்பு, பொருளர் திருமலை ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
