கரூர், மார்ச். 2: கரூரில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6வயது சிறுமியை சுற்றிருந்த நாய்கள் கடித்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். கரூர் சின்னாண்டாங்கோயில் எல்ஆர்ஜி நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரின் மகள் சுவிஸ்ஸா(6). இவர், இந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று மதியம் 2மணியளவில் சிறுமி, தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த 4க்கும் மேற்பட்ட நாய்கள், சிறுமியை சூழ்ந்து கொண்டு கடித்தது. இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் நாய்களை விரட்டினர். பல்வேறு பகுதியில் நாய் கடியால் காயமடைந்த சிறுமி கரூர் அரசு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் நகராட்சி பகுதியில் கட்டுங்கடங்காத நிலையில் தெரு நாய்கள் அதிகளவு சுற்றிதிரிகின்றன. நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், சிறுமிக்கு ஏற்பட்ட நிகழ்வால் மற்ற பெற்றோர்கள் பீதியில் உள்ளனர்.