கோவை, மார்ச் 2: சமையல் காஸ் விலை உயர்வு மூலம் மக்களின் நன்மதிப்பை மத்திய-மாநில அரசுகள் இழந்து வருகின்றன என இல்லத்தரசிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலை உயர்ந்து வருகிறது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 3 முறை சமையல் காஸ் விலை உயர்ந்துள்ளது. பிப். 4ம் தேதி - ரூ.25, பிப். 15ம் தேதி - ரூ.50, பிப். 26ம் தேதி - ரூ.25 என ஒரே மாதத்தில் ரூ.100 விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மீண்டும் ரூ.25 உயர்ந்துள்ளது. இதன்மூலம், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் ரூ.835-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு காரணமாக பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கோவை வீரபாண்டி பிரிவை சேர்ந்த இல்லத்தரசி மனோன்மணி கூறுகையில், ‘‘சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரூ.710-க்கு விற்கப்பட்ட சிலிண்டர், தற்போது ரூ.835-க்கு விற்கப்படுகிறது.