நிலத்தை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயன்ற டிரைவர்

சேலம், மார்ச் 2: கெங்கவல்லி அடுத்த செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் குமரன்(38). டிரைவரான இவருக்கு அபிராமி (28) என்ற மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனர். குமரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அதேபகுதியை சேர்ந்த தண்டபாணியிடம் இருந்து 33.6 சென்ட் நிலத்தை, தனது மனைவி பெயரில் வாங்கி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவர், குமரனின் நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளார். இதுகுறித்து, குமரன் கேட்டபோது, மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், குமரனின் நிலத்தில் ஒரு பகுதியில் வேலி அமைத்து அடியாட்களை கொண்டு மிரட்டி வருகிறார். இந்நிலையில், தனது நிலத்தை மீட்டு தரக்கோரி நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு குமரன் நேற்று தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர் கலெக்டர் அலுவலக முன்பு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுவை போட்டார். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: