நாமக்கல், மார்ச் 2: மாணவர்களை பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த வேண்டியுள்ளதால், சட்டமன்ற தேர்தல் பணிகளில் இருந்து முதுகலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, மாநில தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விபரம்: தமிழகத்தில் கொரோனா பரவலால், கடந்த 10 மாதமாக அனைத்து வகை பள்ளிகளும் மூடப்பட்டன. ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, முதற்கட்டமாக பிளஸ்2 மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து 9, 10, மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 9 ,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதையடுத்து, உயர்கல்வி படிக்க செல்லும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அரசு பொதுத்தேர்வு, மே 3ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எனவே, பொதுத்தேர்வுக்கு முன்னதாக விரைவாக பாடங்களை நடத்தி முடிக்கவும், பொதுத்தேர்வு சார்ந்த அரசு செய்முறை தேர்வுகளுக்கு மாணவ, மாணவியருக்கு பயிற்சியளிக்கவும் வேண்டியுள்ளதால், மாணவர்கள் நலன் கருதி சட்டமன்ற தேர்தல் பணியில் இருந்து, முதுகலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.