செல்லியாண்டி அம்மன் கோயில் விழா பவானியில் நாளை போக்குவரத்து மாற்றம் அடர்ந்த வனப்பகுதி வாக்குச்சாவடியில் வனத்துறையின் வயர்லெஸ் வசதியை பயன்படுத்த திட்டம்

சத்தியமங்கலம், மார்ச் 2:  சட்டமன்ற தேர்தலை ஒட்டி பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி தாலுகாவில் பணிபுரியும் வருவாய் துறை மற்றும் அனைத்து துறை அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான முன் ஆய்வுக் கூட்டம் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது.    பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் உமா சங்கர் தலைமையில், நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில், பவானிசாகர் தொகுதியில் 294 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 80 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு மொத்தம் 374 வாக்குச்சாவடிகள் உள்ளதாகவும், கூடுதலாக 80 வாக்குச்சாவடிகள் உள்ளதால், தேர்தல் பணிக்காக வனத்துறையில் உள்ள அலுவலர்களையும் இம்முறை தேர்தல் பணிக்கு பயன்படுத்திக் கொள்ள உத்தேசித்துள்ளதோடு, சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் தொலைதொடர்பு வசதி இல்லாத, மலைகிராமங்களில் அமைந்துள்ள 16 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தினத்தன்று ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு சதவிகிதம் தொடர்பான தகவல் தெரிவிப்பதற்காக வனத்துறைக்கு சொந்தமான வயர்லெஸ் கருவிகளை பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் உமா சங்கர்

தெரிவித்தார். மேலும் வாக்குச்சாவடியில் குடிநீர் வசதி, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்  உடனடியாக செய்யுமாறு தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வு கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவி சங்கர், பவானிசாகர், சத்தியமங்கலம், தாளவாடி வட்டாரங்களில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: