கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழா கோலாகலம்

கிருஷ்ணகிரி, மார்ச் 2: கிருஷ்ணகிரி மாவட்டம் குருவிநாயனப்பள்ளி கிராமத்தில் நடந்த முதலாமாண்டு எருது விடும் விழாவில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, எருது விடும் விழா, எருதாட்டம் நடத்தப்படுவது வழக்கம். பர்கூர் ஒன்றியம் ஆந்திரா மாநிலம் எல்லையில் உள்ள குருவிநாயனப்பள்ளி கிராமத்தில், முதலாமாண்டு எருது விடும் திருவிழா நடந்தது. இதில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் இருந்தும், அண்டைய மாநிலமான ஆந்திராவில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. போட்டியில் பங்கேற்கும் காளைகளை கால்நடைத்துறையினர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பங்கேற்க அனுமதித்தனர்.

சாலையின் இருபுறங்களில் தடுப்புகள் கட்டப்பட்டு, அதன் இடையே எருதுகளை ஓட விட்டனர். அந்த காளைகளை ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஓட விட்டு, அதில் எந்த காளை குறைந்த நேரத்தில் ஓடி கடந்தது என்பதை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கிட்டு, அந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. அதன்படி, முதல் பரிசாக ₹31 ஆயிரம், இரண்டாம் பரிசாக ₹21 ஆயிரம், மூன்றாம் பரிசாக ₹20 ஆயிரம், நான்காம் பரிசாக ₹12 ஆயிரம், 5ம் பரிசாக ₹11 ஆயிரம் என மொத்தம் 42 காளைகளின் உரிமையாளர்களுக்கு சுமார் ₹2 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவினை காண, கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் குவிந்தனர். விழாவின் போது எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க, கந்திகுப்பம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர்  செய்திருந்தனர்.

Related Stories: