மதுராந்தகம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் சத்தியசாய் ஏற்பாட்டில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளான நேற்று, மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து, அவர்களுக்கு தேவையான ஆடை உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கினார். உடன், மதுராந்தகம் நகர செயலாளர் குமார் உள்ட கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
இதேபோல் செய்யூர் பஜார் பகுதியில், திமுக ஆதரவாளர் கே.டி.ஆர் (எ) கு.தியாகராஜன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து இருளர் குடும்பங்கள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.