மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி முந்திரி காட்டில் வாலிபர் தலை தூக்கில் தொங்கியபடியும், உடல் தரையில் விழுந்து கிடப்பதாக மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், தலை மற்றும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மாமல்லபுரம் அடுத்த நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமம், இருளர் இனத்தை சேர்ந்த ரமேஷ் (19). அதே கிராமத்தில் உள்ள சிற்ப கலை கூடத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதமாக இவருக்கு வேலை இல்லை. இதனால், வருமானமின்றி கடும் அவதியடைந்துள்ளார்.
இந்தவேளையில், கடந்த மாதம் 8ம் தேதி திடீரென மாயமான ரமேஷ், நேற்று மாலை கடம்பாடி முந்திரி தோப்பில் சடலமாக மீட்கப்பட்டார் என தெரிந்தது. புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா என தீவிரமாக விசாரிக்கின்றனர். குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த தெற்கு மலையம்பாக்கம் பகுதியில் உள்ள கிணற்றில் நேற்று காலை ஆண் சடலம் கிடந்தது. தகவலறிந்து, குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், போரூர் அடுத்த முகலிவாக்கத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (47). பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பேராசிரியர். தனது மனைவி பிரியாவுடன், ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, மனைவியை பிரிந்து வாழ்ந்தார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி கோயிலுக்கு செல்வதாக கூறி சென்ற கோபாலகிருஷ்ணன், பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரை காணவில்லை என, அவரது தந்தை மாங்காடு போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தவேளையில், நேற்று கிணற்றில் சடலமாக கிடந்தார் என தெரிந்தது. இதையடுத்து போலீசார், குடும்ப பிரச்னையால் கோபாலகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டாரா, யாரேனும் அவரை கொலை செய்து கிணற்றில் வீசினார்களா அல்லது வேறு காரணமாக என விசாரிக்கின்றனர்.