திருவண்ணாமலை, மார்ச் 1: திருவண்ணாமலை மாவட்டத்தில், 8 இடங்களில் வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது. அதில், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வேட்புமனுக்களை பெற உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், போளூர், கலசபாக்கம், ஆரணி, வந்தவாசி, செய்யாறு ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருவண்ணாமலை தொகுதிக்கு திருவண்ணாமலை ஆர்டிஓ, செங்கம் தொகுதிக்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர், கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு உதவி ஆணையர்(கலால்), கலசபாக்கம் தொகுதிக்கு மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர், போளூர் தொகுதிக்கு மாவட்ட விநியோக அலுவலர், ஆரணி தொகுதிக்கு ஆரணி ஆர்டிஓ, செய்யாறு தொகுதிக்கு செய்யாறு ஆர்டிஓ, வந்தவாசி தொகுதிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஆகியோர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக பணியாற்றுகின்றனர்.