உளுந்தூர்பேட்டை, மார்ச் 1: தமிழகம் முழுவதும் அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் குடிநீர் கம்பெனிகளுக்கு நீதிமன்றத்தின் உத்தரவுபடி, அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா உத்தரவின்படி நேற்று உளுந்தூர்பேட்டை தாசில்தார் காதர்அலி, பொதுப்பணித்துறை மற்றும் வடிகால்வாரிய அதிகாரிகள், மண்டல துணை வட்டாட்சியர் தவமணி, கிராம நிர்வாக அலுவலர் நாகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் உளுந்தூர்பேட்டை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செங்குறிச்சி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட நைனாக்குப்பம் பகுதியில் உரிய அனுமதியின்றி குடிநீர் கம்பெனி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த கம்பெனிக்கு சீல் வைத்த அதிகாரிகள், மின் இணைப்பை துண்டித்தனர்.