மணப்பாறை, மார்ச் 1: குடிநீர் கேட்டு பொய்கைப்பட்டியில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மணப்பாறை அருகே உள்ள பொய்கைப்பட்டியில் ஊராட்சி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை வீதிகளில் உள்ள குழாய்கள் மூலமாக தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தண்ணீர் தொட்டி அருகே குழாய்கள் அமைக்கப்பட்டு அங்கு வந்து குடங்களில் தண்ணீர் பிடித்து கொள்ள ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது. வழக்கம்போல தங்களுக்கு வீதிகளில் உள்ள குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்க வலியுறுத்தி மணப்பாறை- துவரங்குறிச்சி சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் மணப்பாறை இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், மாவட்ட கவுன்சிலர் பாலசுப்பிரமணியன், பஞ்சாயத்து தலைவர் ரோஸ்லின் மேரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதைதொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.