புதுடெல்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றது மற்றும் தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில், சுகேஷ் சந்திரசேகருடன் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிற்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.
இந்த வழக்கில் கூடுதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஒரு முக்கிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இந்த வழக்கின் உண்மைகளை வெளிப்படுத்தத் நான் தயாராக இருப்பதாகவும், தன்னை அப்ரூவராக ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரது கோரிக்கை பரிசீலிக்கப்படும் சூழலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அமலாக்கத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ‘‘ஜாக்குலின் சாட்சியாக மாறினால், சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராக இன்னும் வலுவான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும். ஆனால் இருப்பினும் சுகேஷ் சந்திரசேகர் குறித்து ஜாக்குலின் பெர்னாண்டஸிற்கு ஏற்கனவே எல்லாம் தெரியும் . எனவே அவரை அப்ரூவராக மாறுவது என்பதை ஏற்க முடியாது என்று நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
