சென்னை: அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது. தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வீசுவதையும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை செயல்படுத்த மறுப்பதையுமே அடிப்படையாக கொண்டிருந்த திமுக அரசின் நீட்சியாகவே இந்த அரசையும் பார்க்கவேண்டியுள்ளது.
எனவே, இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற உத்தரவை திருத்தி, மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
