ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.45 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளியை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.இலங்கையில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக ராமநாதபுரத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக ராமநாதபுரம் சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நேற்று ராமநாதபுரம் நகர் இளங்கோவடிகள் தெரு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சென்ற ஒருவரின் டூவீலரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர்.
அப்போது டூவீலரை விட்டுவிட்டு அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். டூவீலரை சோதனை செய்தபோது, 13 கிலோ வெள்ளி கட்டிகள், 90 கிராம் தங்கக்கட்டி இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.45 லட்சம் ஆகும். பதிவு எண் இல்லாத டூவீலர் மற்றும் தங்கம், வெள்ளியை பறிமுதல் செய்து, தப்பியோடிய நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
