ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் குளத்து கரையோர சாலையில் அபாய பள்ளம்

ஏரல், மார்ச் 1:  ஏரல் அருகே ஆறுமுகங்கலம் குளத்து கரையோர சாலையில் உள்ள பாசன மடையின் மேல் உடைப்பு ஏற்பட்டு ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை சீரமைத்திட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏரலில் இருந்து புதுக்கோட்டைக்கு செல்லும் ஆறுமுகமங்கலம் குளத்து கரையோர சாலையில் உள்ள பாசன மடையின் மேல் உடைப்பு ஏற்பட்டு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

 இதனால் இந்த சாலையில் பெரிய வாகனங்கள் செல்லும் போது இந்த பள்ளத்தில் இறங்கினால் பாசன மடை உடைந்து பெரிய விபத்து ஏற்பட நேரிடும். இதனால் இந்த வழியாக வரும் வாகனங்கள் இந்த பள்ளத்தில் இறங்காமல் இருப்பதற்காக பள்ளத்தின் மேல் பெரிய கல்லை தூக்கி வைத்துள்ளனர். இதில் பகல் நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள், கல்லை பார்த்து ஒதுங்கி செல்கின்றனர். ஆனால் இரவு நேரத்தில் எதிரே வரும் வாகனத்திற்கு ஒதுங்குவதற்காக பைக்கில் வருபவர்கள் கல் இருப்பது தெரியாமல் மோதி கீழே விழுந்து பலத்த காயமடைந்து வருகின்றனர். எனவே அரசு அதிகாரிகள் இந்த விபத்து ஏற்பட்டு வருவதை தவிர்த்திடவும், பாசன மடை முழுவதும் சேதமடைவதற்குள் பள்ளத்தை சீரமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: