திருச்செந்தூர் கோயில் மாசித்திருவிழா மலர் கேடயசப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா

திருச்செந்தூர், மார்ச் 1: அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச் செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 26ம் தேதி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 11ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் தெப்ப உற்சவம் நடந்தது. சுவாமி, அம்மன் புஷ்பச்சப்பரங்களில் எழுந்தருளி வெளி வீதி வழியாக நெல்லை நகரத்தார் தெப்பக்குளம் மண்டகப்படிக்கு சேர்ந்தனர். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி சுவாமி தெப்பத்தில் 11 முறை சுற்றி வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சுவாமி மேலக்கோயிலை வந்தடைந்தார். 12ம் திருவிழாவான நேற்று மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் சுவாமி, அம்மன் எட்டு வீதிகளிலும் வலம் வந்து வடக்குரதவீதியில் உள்ள 12ம் திருவிழா மண்டபம் சேர்ந்தது. அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரம் தீபாராதனையை தொடர்ந்து இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் மலர் கேடயச்சப்பரத்தில் திருவீதி பவனி வந்து திருக்கோயில் சேர்ந்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகஸ்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories: