- Rajakamangalam
- முத்துராமலிங்கம்
- முத்து பாலன்
- அஞ்சுக்ரம் மாட்டுக்குடி
- குமாரி மாவட்டம்
- தமிழ்நாடு மின்சார வாரியம்
- சொற்பொழிவு மின்சார பகுதி
ராஜாக்கமங்கலம், மே. 7: குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் மேட்டுக்குடி பகுதியை சேர்ந்தவர் முத்து ராமலிங்கம் மகன் முத்து பாலன் (22) .இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று பகல் ஈத்தாமொழி மின்வாரிய பகுதிக்கு உட்பட்ட பூவன்குடியிருப்பு பகுதியில் மின் கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் மின்வாரிய பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
முத்து பாலன் மின்கம்பத்தில் மேலே ஏறி வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மின் கம்பம் அசைந்தது. இதில் அந்த கம்பத்தில் உள்ள ராடு அருகில் சென்ற உயர் மின் அழுத்த கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியதில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே முத்து பாலன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து முத்து பாலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் ஈத்தாமொழி மின்வாரிய இளநிலை பொறியாளர் விஜயராணி, லைன் மேன் சிவன் உட்பட 7 பேர் மீது பணியின் போது கவனக்குறைவாக செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து உடலை உறவினரிடம் ஒப்படைக்க போலீசார் முயன்ற போது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
