நத்தம் மாரியம்மன் கோயிலில் நாளை பூக்குழி திருவிழா

நத்தம், மார்ச் 1: நத்தம் மாரியம்மன் கோயிலில் மாசிப்பெருந்திருவிழா கடந்த மாதம் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மறுதினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி மஞ்சள் ஆடைகளை அணிந்து, மாரியம்மன் கோயிலுக்கு வந்து காப்புக்கட்டி 15 நாட்கள் விரதம் தொடங்கினர். இதை தொடர்ந்து மயில், சிம்மம், அன்னம் ஆகிய வாகனங்களில் மாரியம்மன் எழுந்தருளி மின்ரதத்தில் நகர்வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இன்று பக்தர்கள் அம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை கொண்டு வந்து காணிக்கையாக செலுத்தும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அரண்மனை பொங்கல் வைத்தல், மாவிளக்கு, காவடி வகையறாக்கள் எடுத்து வரப்படும் நிகழ்வும் நடைபெறும். நாளை திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நடக்கும்.

இதையொட்டி காலையில் கழுகு மரம் ஊன்றப்படும். மாலையில் கழுகுமரம் ஏறிய பிறகு விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பூக்குழியில் வரிசையாக இறங்குவர். அன்றிரவு கம்பம் அம்மன்குளத்தில் கொண்டு போய் சேர்க்கப்படும். மறுநாள் காலையில் அம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து அன்றிரவு அலங்கரிக்கப்பட்ட வண்ண பூப்பல்லக்கில் மாரியம்மன் எழுந்தருளி நகர்வலம் வந்து, அங்குள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து கோயிலுக்கு சென்று இருப்பிடம் போய் சேரும். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், திருக்கோயில் பூசாரிகளும், விழாக்குழுவினர்களும் செய்து வருகின்றனர். பொது சுகாதாரம், குடிநீர் வசதிகளை நத்தம் பேரூராட்சி நிர்வாகத்தினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை நத்தம் போலீசாரும் செய்து வருகின்றனர்.

Related Stories: