பொள்ளாச்சி, மார்ச் 1: அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரம் செய்ய பொள்ளாச்சி நகரில் முக்கிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி நகரில் வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகளை அப்புறத்துதல், அரசியல் கட்சியினர் எழுதிய சுவர் விளம்பரத்தை அழித்தல், சுவரொட்டியை கிழிப்பது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலின்போது, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்கவேண்டிய நன்னடத்தை விதிமுறைகள் குறித்து, தாலுகா அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று, நடைபெற்றது. இதற்கு, சப் கலெக்டர் வைத்திநாதன் தலைமை தாங்கினார்.
தாசில்தார் தணிகைவேல், டிஎஸ்பி.,சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தின்போது, சப்-கலெக்டர் வைத்திநாதன் கூறுகையில் ‘தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்து கட்சியினரும் கடைபிடிக்க வேண்டும்.
எந்தவித அசம்பாவிதனம் ஏற்படாமல் இருக்க அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் உள்பட 3பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்தல் ஆணையம் விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அரசியல் கட்சியினர் தங்கள் புகார்கள் ஏதேனும் இருந்தால், உடன் தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்றார்.டிஎஸ்பி. சிவக்குமார் கூறுகையில் கூறுகையில், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய பல்லடம்ரோடு ராஜேஸ்வரி மஹால் அருகே, திருவள்ளுவர் திடல், மகாராஜா பின்புறம் உள்ளிட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறிய அளவில் கூட்டம் நடத்தி பிரசாரம் செய்ய 12 இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்திற்காக விஐபிக்கள் பேசி செல்லும் இடமாக 19இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எங்கு தேர்தல் பிரசாரம் நடக்க உள்ளது, முக்கிய தலைவர்கள் யார் யார் பேச உள்ளனர் என முன்கூட்டியே, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தகவல் தெரிவிப்பதுடன், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரடியாக வரவேண்டிய அவசியம் கிடையாது. தேர்தல் விதிமுறைகளை முறையாக கையாண்டு அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும்’ என்றார்.