விடுதியில் தங்கி இருந்த தொழிலதிபர் சாவு

கிருஷ்ணகிரி, மார்ச் 1: கர்நாடகா மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் துரைவாணி நகரை சேர்ந்தவர் நரசிம்மன்(42). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 5 வருடமாக இவருக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரிக்கு நேற்று முன்தினம் வந்த அவர், மார்க்கெட் சாலையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். நேற்று முன்தினம் மாலை வரை, அவர் தங்கியிருந்த அறை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த விடுதி மேலாளர், இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் அந்த விடுதி அறையை மாற்று சாவி கொண்டு திறந்து பார்த்தபோது, அவர் படுக்கையில் இறந்து கிடந்தார். விசாரணையில் அவர் மாரடைப்பால் இறந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவரது மாமனார் கிருஷ்ணகிரி அடுத்த கங்கலேரி கிராமத்தை சேர்ந்த சீலன் புகார் கொடுத்தார். அதன் பேரில், டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: