ஈரோடு, மார்ச் 1: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திருமண மண்டபங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் அச்சுக்கூட உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடா்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் கதிரவன் பேசியதாவது: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது, திருமண மண்டபங்கள் மற்றும் இதர சமுதாய கூடங்களை அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு வாடகைக்கு அளிக்கும் போது, அதன் விபரத்தை உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். மண்டபங்களில் பணம், பரிசுப்பொருட்கள், வேட்டி, சேலைகள் போன்றவை வழங்கப்படுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. வளைகாப்பு, பிறந்தநாள் விழாக்கள், காதுகுத்து நிகழ்ச்சிகள் என்ற பெயரில் திருமண மண்டபங்கள் வாடகைக்கு எடுத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.