சென்னை, மார்ச் 1: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட எஸ்.பி கண்ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது. திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி தலைமை வகித்தார். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பி பேசியதாவது: ஒரு பெண்ணின் பெயரை சொல்லி ஆட்சி நடத்தும் தமிழகத்தில், பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகளை அரசு காப்பாற்ற முயற்சிக்கிறது.