கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் திடீர் தர்ணா

கீழ்ப்பாக்கம், மார்ச் 1: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு இடமாறுதல் தொடர்பான கலந்தாய்வு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி இயக்குனர் அலுவலகத்தில் கடந்த 22ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று ஒரு குறிப்பிட்ட துறையில் பணி மூப்பு பட்டியலில் பிரச்னை ஏற்பட்டது. இதை சரிசெய்த பிறகு கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று, கலந்தாய்வில் பங்கேற்ற டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், இதை அதிகாரிகள் ஏற்காததால் கலந்தாய்வுக்கு வந்திருந்த 50 பெண் மருத்துவர்கள் உட்பட 200 பேர் மருத்துவக்கல்லூரி இயக்குனர் அலுவலக வளாகத்தில் தரையில் அமைர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மருத்துவக்கல்லூரி இயக்குனர் டாக்டர் ஆர்.நாராயணபாபு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  பட்டியலில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வதாகவும் உறுதியளித்தார். அதைதொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். பிரச்னை உள்ள துறைகள் மட்டும் சரிசெய்யப்பட்டு இன்று அந்த துறையில் கலந்தாய்வு நடைபெறும் என்று நாராயணபாபு கூறினார்.

Related Stories: