கீழ்ப்பாக்கம், மார்ச் 1: அயனாவரம் வி.பி.காலனியில் விலங்குகள் நலஆர்வலர் ஒருவர், அந்த பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு தினமும் உணவு அளித்து வந்தார். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில், அவர் குடியிருந்த வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 2 தினங்களுக்கு முன் பூட்டி சீல் வைத்தனர். அப்போது, அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட நாய்களை வெளியே திறந்து விடாமல், உள்ளேயே வைத்து பூட்டி சீல் வைத்தனர். தற்போது, அங்குள்ள நாய்கள் வீட்டின் மேற்பகுதிக்கு வந்து பசியால் ஓலக்குரல் எழுப்பி வருகின்றன. அந்த வீட்டில் தொடர்ந்து நாய்களின் ஓலக்குரல் கேட்டுக்கொண்டே இருப்பதால், மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக வந்து அந்த நாய்களுக்கு உணவளிக்க வேண்டும். வீட்டுக்குள் சிக்கி தவிக்கும் நாய்களை விடுவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.